Breaking News
recent

தவமலர்....





நித்தம் ஞாயிறு தேடி வந்து
நிலை மகிழ்ந்து நீந்தி விளையாடிச்
செல்லும் பளிங்கு தெப்பத்தில்
செந்நிற சாந்தாய் மேனி விளங்கி

கன்னி எழில் மொட்டாய் பூத்து நிற்கும்
கமலத்தில் வழியறியாதென பொய்யென
கலங்கி ரீங்கரித்து மேனியில்
தஞ்சம் புகுந்த கார்வண்டு. 

மேனிதழுவி மயங்கிய நேரத்தில் காதோரம்
மோகமாய் காதலுரைத்து மொட்டின் கட்டவிழ்த்து
சதி செய்து இதழ் சுவைத்து இன்பம் கொடுத்து
செந்தேன் அருந்தி சுவைபெற்று களவி கொண்டதும்

பற்றிய கரங்களையும் சொக்கிய விழிகளையும்
தாங்கிய தேகத்தையும் உதறிவிட்டு
காற்றில் வந்த சேதி கண்டு
பறந்து சென்றது கார்வண்டு என்று.

நெஞ்சம் கொதித்து கண்கள் சிவந்து
அவனை தனக்கே அடைய வேண்டித்தான்
மேனி வருத்தி யாருடனும் உற்ற நீருடனும்
ஒட்டாது ஓயாமல் ஒற்றைக்காலில்
தவம் செய்கிறாயோ மலர்தாமரையே...

----------------------------------------------------
-----உங்கள் அன்பு இசையன்பன்---------

No comments:

Powered by Blogger.